Saturday, December 24, 2016

கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி

மந்தையின் துருக்கம்
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே அவதரித்த முதல் கிறிஸ்துமஸ் தினமான அன்றைய இரவு நடந்த காரியங்களை நாம் தியானிக்கலாம்.
       கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசம் ரோமர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாட்கள் அது. யூத மக்களின் வாழ்க்கை நிலை வித்தியாசமானது. யூத சமுதாயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட தருணம். நாம் வாழும் இந்த நாட்களில் பணம் பதவி, அதிகாரம் இவற்றை வைத்துதான் மதிப்பு மரியாதை எல்லாமே. ஆனால் யூத சமுதாயம் முற்றிலும்  வித்தியாசமானது. எப்படியென்றால் யூதர்களைப் பொறுத்தமட்டில் நியாயப்பிரமாணம் அவர்களின் ஜீவனைப் போன்றது. ஒருவர் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்கிறதில் எவ்வளவு வைராக்கியம் காட்டுகிறாரோ அந்த அளவுக்குத்தான் மதிப்பு மரியாதை எல்லாமே. அந்த விதத்தில் நியாயப்பிரமாணங்களை அதிகமாய் கடைபிடித்தவர்கள் ஆசாரியர்கள் தான். ஆகையால் சமூகத்தின் உச்சபட்ச மதிப்ப்போடும், அதிகாரங்களோடும் வாழ்ந்தவர்கள் ஆசாரியர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் தேவாலயத்தில் அதிகாரம் படைத்தவர்களாயிருந்த சதுசேயர்கள். அதற்கடுத்த நிலையில் யூத ஜெப ஆலயங்களில் அதிகாரம் பெற்றிருந்த பரிசேயர்கள். அதற்கடுத்த நிலையில் வேதபாரகர்கள் என்று சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
       இதில் சமூகத்தின் கடைநிலையில் வாழ்ந்தவர்கள் மேய்ப்பர்கள். அந்த மேய்ப்பர்களைக் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். அந்நாட்களில் மேய்ப்பர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது. யூத மக்கள் யாவராலும் புறக்கணிக்கப்பட்டுகீழானவர்களாய், தீழ்ப்பானவர்களாய், தீட்டானவர்களாய் கருதப்பட்டவர்கள் மேய்ப்பர்கள். ஒட்டு மொத்த யூத சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தது. ஏனென்று சொன்னால் நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் மட்டுமே யூதர்களிடம் கனத்தைப் பெற முடியும். ஆனால் மேய்ப்பர்களால்  யூதர்களின் நியாயப்பிரமாணத்தை எந்தவிதத்திலும் கடைபிடிக்க முடிவதில்லை. யூதர்களின் பிரமாணத்தின்படி ஒருநாளில் இரண்டு தரம் ஸ்நானம் பண்ண வேண்டும். ஆனால் தங்கள் மந்தைகளை மேய்த்துக் கொண்டு காடு மேடெல்லாம் அலைகிற மேய்ப்பர்களுக்கு இது சாத்தியமில்லை. மேலும் யூதர்களின் பிரமாணத்தின்படி மரித்துப்போன எதையும் தொடக்கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் தீட்டானவர்களாய் கருதப்படுவார்கள். மேய்ப்பர்கள் காடுமேடெல்லாம் அலைகிறபடியால் இறந்து போன எதையாகிலும் மிதித்துவிடுவார்கள். ஆடுகள் ஏதாகிலும் மரித்துப்போனால் அதை அப்புறப்படுத்த அதை தூக்க வேண்டியிருக்கும். இப்படி யூதர்களின் பிரமாணத்தை எந்தவிதத்திலும் மேய்ப்பர்களால் கடைபிடிக்க முடிவதில்லை. ஆகையால் யூத சமுதாயமே அவர்களை ஒதுக்கி வைத்திருந்தது.  புறக்கணித்து வந்தது. மேய்ப்பர்கள் சமூகத்தின் மிக கீழான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
       மேய்ப்பர்கள் பட்ட அவமானங்களுக்கும், நிந்தனைளுக்கும் அளவு கிடையாது. யூதர்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் எந்த விசேஷ வைபவங்களுக்கும், நல்ல காரியங்களுக்கும் மேய்ப்பர்களை அழைக்கவே மாட்டார்கள். காரணம் மேய்ப்பர்கள் தீட்டானவர்களாய் கருதப்பட்டபடியால்  அவர்கள் யாரையாகிலும் தொட்டால் அவர்களும் தீட்டுப்படுவார்கள் என்பதால் யாரும் அவர்களை திருமண நிகழ்ச்சி போன்ற எந்தக் காரியங்களுக்கும் அவர்களை அழைக்கவே மாட்டார்கள். விருந்து, பண்டிகை போன்ற எதற்குமே அவர்களை அழைக்கவே மாட்டார்கள். நல்ல செய்தி என்று எதையுமே மேய்ப்பர்கள் கேள்விப்பட்டது கிடையாது. இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா ? நல்ல செய்தி என்ற ஒன்றை அவர்கள் கேள்விப்பட்டதே கிடையாது. ஆனால் கர்த்தரோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிற நற்செய்தியை மேய்ப்பர்களிடத்தில்தான் முதலாவது அறிவித்தார்.
        இந்த மேய்ப்பர்கள் யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலையிலும் யூதர்களுக்கு பல வழிகளில் உதவி செய்து வந்தார்கள். எப்படியென்றால்   யூதர்கள் தேவாலயத்தில் பலி செலுத்துவதற்குத் தேவையான ஆடுகளை அதிலும் விசேஷமாய் முதற்பேறான ஆடுகளை பழுதற்றதாக பராமரித்து கொடுப்பவர்கள் இந்த மேய்ப்பர்கள்தான். மேய்ப்பர்கள் பழுதற்றதென்று சான்று கொடுத்தால் மாத்திரமே அந்த ஆட்டுக்குட்டி தேவாலயத்தில் பலியாக அங்கிகரிக்கப்படும். இப்படி பழுதற்ற முதற்பேறான ஆடுகளை பாராமரிப்பதற்கென்றே மேய்ப்பர்கள் மந்தையின் துருக்கம் என்ற ஒரு இடத்தை வைத்திருந்தார்கள். கல்லுகளை ஒன்றன் மீது ஒன்று வைத்து கோபுரம் போலக் கட்டப்பட்டிருக்கும். அதன் மேலேறி நின்று தூரத்தில் இருந்து கரடி போன்ற விலங்குகளோ அல்லது திருடர்களோ வருகிறார்களா என்று பார்ப்பார்கள். அந்த மந்தையின் துருக்கத்தைச் சுற்றிலும் ஆடுகள் மற்றும் மற்ற கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு மாட்டுத்தொழுவம் போன்றே அது காட்சியளிக்கும்.  அந்த மந்தையின் துருக்க கோபுரத்தின் அடியில் ஒரு அறை ஒன்று இருக்கும். அந்த அறை எதற்கென்றால் ஒரு ஆட்டுக் குட்டி கர்ப்பந்திறந்து  முதன்முறையாக குட்டியை ஈனப்போகிறது என்றால் அதை அந்த மந்தையின் துருக்கத்துக்கு கொண்டுவந்துவிடுவார்கள். அதை கொண்டுவந்து அது தன் முதற்பேறான குட்டியை ஈன்றவுடன் அதை பெற்று, அது அங்குமிங்கும் துள்ளும்போது காயமேதும் ஏற்படாதவண்ணம் அதை துணிகளில் சுற்றிவிடுவார்கள். அதை துணிகளில் சுற்றியபின் மந்தையின் துருக்கத்தில் இருக்கும் சுண்ணாம்பினால் செய்யப்பட்ட ஒரு குழி போன்றதோர் தொட்டியில் கிடத்திவிடுவார்கள். அந்தக் குழிக்கு முண்ணனை என்று பெயர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றால் அந்தக் குழி சுண்ணாம்பினால் செய்யப்பட்டிருப்பதால் அந்த ஆட்டுக் குட்டிக்கு நீண்ட நாட்களுக்கு வியாதி என்பதே வராது. அந்த முன்னனையில் கிடத்தின பிற்பாடு அதைச் சோதித்துப் பார்ப்பார்கள். அதன் பற்கள், காது மடல், கால்கள் என எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பார்கள். அந்த ஆட்டுக்குட்டி எந்த ஊனமும் இல்லாமல் பழுதற்றதாக பிறந்திருந்தால் மேய்ப்பர்கள் அடைகிற சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. உடனே அவர்கள் சந்தோஷமாய் பாட ஆரம்பித்து விடுவார்கள். மந்தையின் துருக்கத்தில் இருந்து பாடல் சத்தம் கேட்டாலே யூதர்கள் அத்தனைபேருக்கும் தெரியும் மந்தையின் துருக்கத்தில் தேவாலயத்தில் பலியிடப்படுவதற்கென்றே ஒரு பழுதற்ற முதற்பேறான ஆட்டுக்குட்டி பிறந்திருக்கிறது என்று!
.
       இன்னொரு விதத்திலும் மேய்ப்பர்கள் யூதர்களுக்கு உதவினார்கள். எப்படியெனில் நியாயப்பிரமாணத்தின்படி ஒரு ஸ்திரீ இரத்தத்தினால் தீட்டுப்படுகிறபோது அவள் இருக்கிற மனையையோ அல்லது அந்த வீட்டில் இருக்கிற பொருள்களையோ யாரும் தொடக்கூடாது. அப்படித்தொட்டால் அவர்களும் தீட்டுப்பட வேண்டியிருக்கும் (லேவி 15) ஆகையால் ஒரு ஸ்திரீ இரத்தத்தினால் தீட்டுப்படுகிறபோது அந்த வீட்டிலிருக்கிற யாவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து வீட்டிற்கு வெளியே கூடாரமிட்டுத் தங்குவார்கள். ஆனால் அவ்வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் என பலர் இருந்து அந்த ஒரு ஸ்திரீயினிமித்தம் அவ்வீட்டிலிருக்கிற அத்தனை பேரும் வெளியேற முடியாத சூழல் இருந்தால் அந்த ஸ்திரீயை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். அவள் வீட்டைவிட்டு எங்கு போக முடியும்? அவளை நேராக மந்தையின் துருக்கத்திற்கு அனுப்பி விடுவார்கள். அவளுடைய தீட்டின் நாட்கள் நிறைவேறும் வரை அவளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு மேய்ப்பர்களுடையது. அப்படியானால் அந்த ஸ்திரீயினிமித்தம் மேய்ப்பர்கள் தீட்டுப்படமாட்டார்களா என்றால் யூதர்களைப் பொறுத்தமட்டில் மேய்ப்பர்கள் தீட்டானவர்கள்தானே ஆகையால் அவர்களுக்கு பிரச்சினை ஒன்றுமில்லை.
       இப்பொழுது யோசேப்பு - மரியாளின் காரியத்துக்கு வருவோம். குடிமதிப்பு எழுதுவதற்காக யோசேப்பும் மரியாளும் நாசரேத்திலிருந்து பெத்லெகேமுக்குப் போனார்கள். அவ்விடத்துக்கு அதாவது பெத்லெகேமுக்கு போய் அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில் அவ்விடத்திலே அதாவது பெத்லகேமிலே இருக்கையில் மரியாளுக்கு பிரசவ காலம் நேரிட்டது.(லூக்கா 2 : 6). அவர்கள் பெத்லகேமிலே இருந்தார்கள் என்றால் அவர்களுக்கென்று வீடு இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆம். யோசேப்புக்கு வீடு இல்லாமலில்லை. வீடெல்லாம் இருந்தது. யோசேப்பு ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. தாவீதின் வம்சத்தில் வந்த ராஜ பரம்பரை. வீடு இருந்தது. இஸ்ரவேலில் யாரும் சொத்துகளை அறுதியிட்டு விற்க முடியாது.  ஆனால் என்ன ஒரு காரியம் - இப்போது சொத்திற்கு பங்காளிகள் அநேகர் இருக்கிறார்கள். 
    
       வீடு முழுவதும் குடிமதிப்பு எழுதுவதற்காக வந்த தாவீதின்  வம்சத்தாரால் நிறைந்திருக்கிறது. அப்போது மரியாளுக்கு பிரசவ காலம் நேரிட்டது. பிரசவத்தின் போது மரியாள் இரத்தத்தினாலாகிய தீட்டுப்படுவாள். அப்போது அந்த வீட்டில் இருக்கிற அத்தனை பேரும் மரியாளால் தீட்டுபட வேண்டியிருக்கும். ஆகையால் அவ்வீட்டிலிருக்கிற அத்தனைபேரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழல். ஆனால் அவள் ஒருத்தியினிமித்தம் அத்தனைபேரும் வெளியேற வாய்ப்பில்லை. ஆக மரியாளைத்தான் வெளியே அனுப்ப வேண்டும். எங்கே அனுப்புவது? மந்தையின் துருக்கத்துக்கு. குழந்தையைப் பெற்றெடுக்க தனித்த இடம் இல்லாதபடியினால் (கிரேக்கத்தில் கட்டலுமா” Kataluma – என்பதற்கு மேல்வீட்டறை என்று அர்த்தம். அது இங்கு சத்திரம் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது).
       மரியாளை மந்தையின் துருக்கத்திற்கு அனுப்பினார்கள். அவள் தன் முதற்பேறான குழந்தையைப் பெற்று குழந்தையை துணிகளில் சுற்றி முன்னனையிலே கிடத்தினாள்.  மரியாள் ஈன்றெடுத்திருக்கிற இந்த முதற்பேறான ஆட்டுக்குட்டி பழுதற்றதா என்பதை யார் சோதிக்க வேண்டும்? மேய்ப்பர்கள்தானே. அவர்கள் சோதித்துப் பார்த்தால்தான் இந்த இயேசு என்கிற ஆட்டுக்குட்டியை உலகத்தின் பாவத்திற்காக தேவாலயத்தில் பலியிட முடியும். ஆகையால்தான் தூதர்கள் முதலாவது மேய்ப்பர்களிடத்தில் போய் அறிவித்தார்கள். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். (லூக்கா 2 : 11-12)
        இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் இதற்கு முன்பும் எத்தனையோ ஸ்திரீகள் மந்தையின் துருக்கத்துக்கு வந்து தங்கள் குழந்தைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகளைப் பற்றியெல்லாம்  தூதன் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? அந்தக் குழந்தைகள் எல்லம் வாழ்வதற்கென்றே பிறந்த குழந்தைகள். ஆனால் இயேசு என்கிற இந்த ஒரு குழந்தைதான் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பதற்கென்றே பிறந்த குழந்தை. ஆகையால் தூதன் மேய்ப்பர்களிடத்தில் போய் அறிவித்தான்.
       மேய்ப்பர்கள் வந்தார்கள். பார்த்தார்கள். சந்தோஷமாய் பாட ஆரம்பித்தார்கள். அவர்கள் பாட ஆரம்பித்தார்கள் என்றாலே என்ன அர்த்தம்? மந்தையின் துருக்கத்தில் முன்னனையிலே கிடத்தப்பட்டிருக்கிற இயேசு என்கிற இந்த ஆட்டுக்குட்டி முழு உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்ப்பதற்காக பழுதற்றதாய்ப் பிறந்திருக்கிறது என்பதுதான்!
        மேய்ப்பர்களைப் பொறுத்தமட்டில் தாவீது ராஜாதான் விருப்பமானவர். மேய்ப்பர்கள் தாவீது ராஜாவைக்குறித்து அடிக்கடி பாடுவது உண்டு. தாவீது ராஜாவைப் பார்த்தால் அவரோடு சேர்ந்து நானும் இப்படிப் பாடுவேன் அப்படிப் பாடுவேன் என்று பாடுவார்கள். தாவீது ராஜாவை அவர்கள் கண்கள்  கண்டதோ இல்லையோ. இராஜாதி ராஜாவை அவர்கள் கண்கள் கண்டது.
     இதை கர்த்தருடைய வேதத்தில் இருந்து விளக்கமாய்ப் பார்க்கலாம். மீகா புஸ்தகத்தில் ஏழு அதிகாரங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு அதிகாரத்திலும் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை குறித்து ஒரு முன்னறிவிப்பு இருக்கிறது. அவைகளை வரிசையாகப் பார்க்கலாம். முதல் அதிகாரத்தில் அவர் வானத்திலிருந்து இறங்கிவரப்போகிறார்.(மீகா 1 : 3). அவர் எப்படிப்பட்டவராக வரப்போகிறார்? ராஜாவாக வரப்போகிறார் (மீகா 2 : 13). ராஜாவாக வரப்போகிறவர் என்ன செய்யப்போகிறார்? யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க வருகிறார் (மீகா 3 : 8). வருகிறார் என்றால் எங்கேவந்து பிறக்கப் போகிறார்? மந்தையின் துருக்கத்துக்கு(மீகா 4 :8). மந்தையின் துருக்கமென்றால் எங்கே உள்ள மந்தையின் துருக்கம்? பெத்லெகேமிலுள்ள மந்தையின் துருக்கம்(மீகா 5 : 2). பெத்லெகேமிலுள்ள மந்தையின் துருக்கத்தின் விசேஷம் என்ன? அதில் பிறக்கிற ஆட்டுக்குட்டிகள் முதற்பேறான ஆட்டுக்குட்டிகள் (மீகா 6 : 7). பெத்லகேமிலுள்ள மந்தையின் துருக்கத்தின் விசேஷம் என்ன? அது என்ன செய்யப் போகிறது? உலகத்தின் பாவத்தை அடக்கிப்போட வருகிறது (மீக 7 : 19)  கர்த்தருடைய பிறப்பின் இரகசியத்தை இப்பொழுது அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.  
         
எனக்கன்பான தேவப்பிள்ளையே, சொந்தக் குடும்பத்தில் உள்ளவர்களால், உறவினர்களால், சக மனிதர்களால் அல்லது சக ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்டு வேதனைகளும் வருத்தங்களும் நிறைந்தவர்களாய் காணப்படுகிறீர்களோ? ஏன் என்னைப் புறக்கணிக்கிறார்கள் என்றே தெரியாமல் தவிக்கிறீர்களோ? புறக்கணிப்பால் ஏற்பட்ட காயங்கள் ஆற்ற முடியாத்தாய் இருக்கிறதோ? கலங்க வேண்டாம். மனிதர்களின் புறக்கணிப்பில் இருந்துதான் தேவனுடைய அங்கீகாரமே ஆரம்பமாகிறது. மனிதர்கள் உங்களை புறக்கணிக்கிறார்கள் என்று சொன்னால் உத்தரவாதம் பண்ணிக்கொள்ளுங்கள் - பரலோகம் உங்களை அங்கீகரிக்க ஆரம்பித்து விட்டதென்று. கிறிஸ்து பிறந்த நாட்களில் யூத சமுதாயமே மேய்ப்பர்களைப் புறக்கணித்தது. ஆனால் அப்படிப் புறக்கணிக்கப்பட்ட அந்த மேய்ப்பர்களைப்பற்றி பேசாத கிறிஸ்துமஸ் ஆராதனை இல்லை. கர்த்தருடைய மகிமை உங்களைச் சுற்றிலும் பிரகாசிக்கும் நாட்கள் வரும்.  யார் யாரெல்லாம் உங்களைப் புறக்கணித்தார்களோ அவர்களெல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் உங்களை கனப்படுத்தும் நாட்கள் வரும்.  Article By: Bro.Jublin    

Wednesday, June 22, 2016

ரகுராம் ராஜன்

யார் இந்த ரகுராம் ராஜன்?

ஏன் அவர் பதவியை நீட்டிக்காதது பெரிதாகப் பேசப்படுகின்றது ? தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலகப் பொருளாதாரச் சரிவை மிகச் சரியாகக் கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
அது மட்டும் இல்லாமல் உலகப் பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணியாற்றிய பெருமை உடையவர்.
2013 இல் உலகத்தின் பல நிறுவனங்கள் கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்த போதும் அதை விட்டு விட்டு இந்தியப் பொருளாதரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான RBI governor பதவியை ஏற்றுக்கொண்டார்.

அவர் செய்த முக்கியமான பணிகள்

அவர் பதவி ஏற்ற பொழுது நம் பொருட்களின் விலைவாசியைக் குறிக்கும் பணவீக்கம் 11 சதவிதத்துக்கு மேல் இருந்தது அதைப் பாதிக்கு மேல் குறைத்து உள்ளார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை 25 லட்சம் கோடி          (3.6 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கு உயர்த்தி உள்ளார்.

இந்திய வங்கித் துறையில் வராக் கடன்கள் மிகவும் அதிகமாக உள்ளதை சரி செய்யும் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கினார் (Banks asset review).

இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறந்த ஒரு நிபுணரின் கையில் உள்ளது என்று உலக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கினார்

இது எல்லாற்றுக்கும் சிகரம் வைத்தது போல 2016 ம் ஆண்டின் உலக முக்கியத்துவம் வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக Time நாளிதழால் தேர்வு செய்யப்பட்டார்

இவர் இப்போது பதவியை நீட்டிப்பு செய்ய விரும்பவில்லை என்று சொல்ல முக்கியமான காரணங்கள்
 .
  • துணிச்சலாகத் தனது முடிவுகளை எடுக்கக் கூடிய ராஜனின் செயல்கள் இந்தியாவில் உள்ள பல முறைகேடாகக் கடன் பெற்ற தொழிலதிபர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

  • அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக வங்கிகள் மூலமாகக் கொடுக்கப்பட்ட வராக் கடன்களை வசூல் செய்யக் கிளம்பின வங்கிகள்.

  • இதனால்தான் விஜய் மல்லயா,அணில் அம்பானி போன்ற முறையில்லாமல் கடன் வைத்துள்ள முதலாளிகளுக்கு நெருக்கடி உருவானது.

விளைவு??????

விஜய் மல்லயா நாட்டை விட்டு ஓடினார்.

அம்பானி போன்றோர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதனால்........கள் அரசியல்வாதிகள் மூலமாக ராஜனுக்கு நெருக்

இவர்கள் அரசியல்வாதிகள் மூலமாக ராஜனுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.

அரசாங்கம் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத ராஜனின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளை பயம்கொள்ளச் செய்தது. மோடியின் "Make in India" வில் உள்ள குறைகள் போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியது மற்றும் தொழில் அதிபர்கள் எளிதாகக் கடன் பெற வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லிய போது அவ்வாறு செய்வது விலை வாசியை உயர்த்தும் மற்றும் ஏழை, நடுத்தரவர்க்கத்தைப் பாதிக்கும் என்று அவர் மறுத்தது அரசியல்வாதிகளை கோபம் ஏற்றத் தொடங்கியது .

இவரால் பாதிக்கப்பட்ட பெரும் பண முதலைகள், சுப்ரமணியன் சுவாமி மூலமாகக் காய் நகர்த்தத் தொடங்கினர். சுவாமி, ராஜன் ஒரு தேசத்துரோகி என வெளிப்படையாக பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

இதன் தொடர்ச்சியாக மனம் வெறுத்த ராஜன், தான் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தான் விரும்பும் பேராசிரியர் பணிக்குத் திரும்பச் செல்வதாக அறிவித்து உள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து.......................................................... 

பங்குச்சந்தைகள் அதிர்ந்தன!! 

ரூபாய் மதிப்பு சரிந்தது!!

ராஜன் போன்ற திறமைசாலிகள் இந்தியாவை விட்டு வெளியேறுவது இந்தியாவுக்குப் பெரும் இழப்பு என்று அமர்த்தியா சென் போன்ற பல பொருளாதார மேதைகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எது எப்படியோ! இந்திய பண முதலைகள் மற்றும் சுப்பிரமணிய சுவாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.


இது தான் நம் தேசத்தின் அவல நிலை!!!! 

Thursday, May 19, 2016

இளைய தலைமுறை

நமது இளைய தலைமுறையினரின் சமுதாய அறிவு, அக்கறை மற்றும் விழிப்புணர்வு பற்றி முந்தைய பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். பார்க்கவும்:  http://sigmafashions.blogspot.in/2016/05/blog-post_17.html அதில் குறிப்பிட்ட வீடியோவை https://www.youtube.com/watch?v=yEXoD7YBYS0 என்ற சுட்டியில் காணலாம். அந்த பதிவில் என்னுடைய பார்வையை நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வருத்தத்தின் அர்த்தம் இன்றைய தேர்தல் முடிவுகளில் வெளியாகி இருக்கிறது. மாற்றத்தை இன்றைய தலைமுறையினர் உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று வாக்களிக்கவில்லை அல்லது மாற்றத்திற்கான வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பது நிதரிசனம்!! நம் பெரியவர்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. சமூக வலைதளங்களையும் பொழுதுபோக்குக்காகவேயன்றி சமூக அறிவுக்காக பயன்படுத்தவில்லை. இந்நிலை மாறவேண்டும். பெற்றோரும் பெரியவர்களும் சமுக அறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் நேராக இளையதலைமுறையினரை வழிநடத்தவேண்டும். வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது!!!!!!

மாற்றம்-ஏமாற்றம்!!

என்னுடைய முந்தய பதிவுகளில் இந்தத் தேர்தலில் பா.மா.க. வுக்கு வாக்களிக்க வேண்டி காரணங்களுடன் எழுதியிருந்தேன். என்னுடைய நட்பு, உறவு வட்டங்கள் அனைவரும் போயும் போயும் ஒரு சாதீய வாதம் பேசும் கட்சிக்கா வாக்களிக்கச் சொல்லுகிறாய்? என்று கிண்டலடித்தார்கள். அதற்கு நான் பா.ம.க. ஒரு சாதி அமைப்பிலிருந்து உருவாகி இருந்தாலும் இப்போது அது ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான அரசியல் இயக்கம் என்று தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அதனுடைய முதல்வர் வேட்பாளரின் தகுதி திறமை களத்தில் இருக்கும் யாருக்கும் இல்லை. ஒரு வாய்ப்புக்கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை என்று கூறி சமாளித்தேன். அன்புமணி தன்னை ஒரு தலைவராக முன்னிலைப்படுத்த அவர் தந்தை மூலம் கிடைத்த சாதீய வண்ணம் பூசப்பட்ட மேடையைப் பயன் படுத்தியதில் என்ன தவறு என வாதிட்டேன் இப்போது ரிசல்ட்டைப் பாருங்கள். அவருக்கு அவரது வட்டத்திற்கு வெளியே எந்த ஓட்டும் கிடைக்கவில்லை. எவ்வளவு அலைந்து மாற்றம் முன்னேற்றம் என்று கூவிக்கூவி அழைத்துப்பார்த்தாலும் நம் அறிவாளிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. பழைய குட்டையிலேயே தாவி இருக்கிறார்கள். அவரை ஓரளவிற்குக் கூட ஊக்குவிக்கவில்லை. அவருடைய வட்டம் மட்டும் இல்லாதிருந்தால் அவரின் நிலைமை என்ன என்று யோசித்தீர்களா? வைகோ, விஜயகாந்த், சீமான் போல துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டியதுதான். நல்ல வேளை! அவரது வட்டம் அவரைக்காப்பாற்றியது. இன்று 5.3 % வாக்கு வங்கியுடன் முன்றாவது இடத்திலாவது இருக்கிறார். அவரை சாதியவாதி என்று திராவிடக் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக விமரிசனம் செய்தன. ஆனால் அறிவு ஜீவிகள் கூட அதை நம்பி அவர் தனது வட்டத்திற்கு வெளியே ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டும் கூட அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் தானே அவரின் சாதீய வட்டத்திற்கு வெளியே செயல்பட்டு அவரின் திறமையை நிரூபிக்க அவரால் முடியும். அவர் சாதியவாதி என்றே வைத்துக்கொள்ளுங்கள். அவர் என்ன தான் செய்துவிடுவார்? மற்ற எல்லாச் சாதியினரையும் அழித்துவிடுவாரா? அது சாத்தியமா? அது என்ன பூச்சாண்டி? இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களிடையே ஒப்பீடு செய்தால் அவருக்கு என்ன குறை? அர்த்தமே இல்லாமல் ஒரு தகுதி வாய்ந்த நபரை உதாசீனம் செய்தார்கள். அவருடைய வட்டம் தான் அவரைக்காப்பாற்றியது. அவரது வட்டத்திற்கு வெளியே அவருக்கு ஆதரவு காட்டப்படாவிட்டால் அவர் எப்படி துணிந்து அவரது வட்டத்திற்கு வெளியே வருவார். இதை ஒருவரும் சிந்திப்பாரில்லை. அவரது சாதிச்சங்கப் பின்ணணியினை விமரிசனம் செய்தோர்கள் இப்போது எங்கே போனார்கள்?  எனவே அவருக்கு சாதிச்சாயம் பூசாமல் அடுத்த முறையாவது ஒரு வாய்ப்பளிக்கலாம் என்பது என்னுடைய பரிந்துரை. மற்றவர்களைப் போலவே அவரும் தவறு செய்தால் அடுத்த வாய்ப்பில் அவரைத்  தூக்கிவிட வேண்டியதுதான். பிறகு என்ன செய்வது? மறுபடியம் மாற்றம் தான். மாற்றம் ஒன்றே மாறாதது. ஏமாற்றங்கள் மாறும்!!!! 

தமிழ்நாடு தேர்தல் 2016 – முடிவுகள்




வரவேற்கத்தக்க அம்சங்கள்:
  1. தி.மு.க.வின் தோல்வி: தி.மு.க. வசம் ஆட்சி செல்வது நல்லதல்ல. அதிலிருந்து தப்பித்தோம். அதே சமயம் அ.தி.மு.கவுக்கு அடுத்து அது பலத்துடன் இருப்பதால் ஜெயலலிதா அதிகம் ஆட்டம் போடாமல் கட்டுக்குள் இருப்பார்.
  2. விஜயகாந்த், சீமான் போன்ற அரசியல் கோமாளிகளின் கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி.
  3. பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க. ஆகியவை தமது சாதீய, மதவாத சாயங்களினின்று விடுதலை அடைய வேண்டும் என்கின்ற படிப்பினை.
  4. வைகோவிற்கு ஒரு வலுவான குட்டு இனி யாரும் அவரை நம்பிச்செல்ல மாட்டார்கள் என நம்பலாம்.
  5. நல்ல வேளையாக தொங்கு சட்டமன்றம் அமையவில்லை. அமைந்திருந்தால் நம் அரசியல் வாதிகளின் அந்தர்பல்டிகளைக் கண்டு நாம் அசந்து போயிருப்போம்!

வருந்தத்தக்க அம்சங்கள்:

  1. நமது மக்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. இத்தனை ஆண்டு காலம் செயல்படாதவர்களையும் ஊழல்வாதிகளையும் மட்டுமே தேர்ந்து எடுத்து ஆட்சி செய்ய வைத்து இருக்கிறோம். இப்போதாவது ஒரு மாற்று அரசியலுக்கு வழிவகுத்து இருக்கலாம். தி.மு.க. - அ.தி.மு.க தவிர்த்த யாரையாவது ஊக்குவித்து இருக்கலாம். இவர்கள் இருவரையும் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளித்து இருந்தாலும் இதே ரிசல்ட் தான் வந்து இருக்கும். ஆனாலும் தி.மு.க. - அ.தி.மு.க வாக்கு சதவீதம் குறைந்து அவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டு இருக்கும். இப்போது உள்ள நிலைமையில் நம்மை விட்டால் வேறு கதியில்லை என்கின்ற மிதப்பு இரு தரப்பினருக்குமே இருக்கும். இந்த நிலை தவிர்க்கப்பட்டு இருக்கலாம். நல்ல வாய்ப்பினை தவறவிட்டு விட்டோம்.
  2. மாற்று அரசியலுக்கு முயன்றவர்களை ஊக்குவிக்கத் தவறிவிட்டோம். ஒதுங்கி நிற்கும் நல்லவர்கள் இனி ஒருபோதும் உள்ளே வரத்தயங்குவதற்கு வழிவகுத்துவிட்டோம். இப்போது இருக்கும் மாற்று நபர்கள் சரியில்லை என்றாலும் கூட மக்களுக்கு மாற்று அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்கின்ற விஷயத்தை பதிவு செய்யத் தவறிவிட்டோம்.
  3. மாற்றத்திற்கான வாய்ப்புக்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்து இருக்க வேண்டும்.
  4. ஜெயலலிதா இனி பிச்சை போடுவார். அதற்காக நமக்கு தெண்டம் போடுவார். எதைபற்றியும் கவலைப்படாமல் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ளுவார். அனைவரும் அவருக்குப் பள்ளிஎழுச்சி பாடி தவம் இருக்க வேண்டும்!! நம் தலை எழுத்து!!! குடிமகன்களை மட்டுமே ஆதரிப்பார்!! சாராய வியாபாரம் அமோகமாக நடைபெறும்!!!

Tuesday, May 17, 2016

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்


இந்த வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவிட்டது. நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களே இப்படி ஆகிவிட்ட போது இனி இறைவன் தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!!! படித்த திமிர் அனைவர் முகத்திலும் அப்பட்டமாகக் காணப்படுகிறது. இந்த நிலை மாறுமா????

 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட வாரியாக தேர்தல் சதவீதத்தை வெளியிட்டுள்ளார். தர்மபுரி 85.03 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை60.99 சதவீதத்தடன் கடைசி இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 74..26 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் லக்கானி கூறியுள்ளார்.
லக்கானி வெளியிட்ட விபரம்:
01. திருவள்ளூர்: 71.20 சதவீதம்
02. சென்னை: 60.99 சதவீதம்
03. காஞ்சிபுரம்: 68.77 சதவீதம்
04. வேலூர்: 77.24 சதவீதம்
05. கிருஷ்ணகிரி: 78.38 சதவீதம்
06. தர்மபுரி: 85.03சதவீதம்
07. திருவண்ணாமலை: 82.99 சதவீதம்
08. விழுப்புரம்: 79.44 சதவீதம்
09. சேலம்: 80 சதவீதம்
10. நாமக்கல்: 82.10 சதவீதம்
11. ஈரோடு: 79.39 சதவீதம்
12. நீலகிரி: 70.53 சதவீதம்
13. கோவை: 68.13 சதவீதம்
14. திண்டுக்கல்: 79.62 சதவீதம்
15. கரூர்:83.09 சதவீதம்
16. திருச்சி: 75.77 சதவீதம்
17. பெரம்பலூர்: 79.54 சதவீதம்
18. கடலூர்: 78.64 சதவீதம்
19. நாகை: 76.05 சதவீதம்
20. திருவாரூர்: 78.04 சதவீதம்
21. தஞ்சாவூர்: 77.44 சதவீதம்
22. புதுக்கோட்டை: 77.07 சதவீதம்
23. சிவகங்கை: 69.80 சதவீதம்
24. மதுரை: 71.09 சதவீதம்
25. தேனி: 75. 29 சதவீதம்
26. விருதுநகர்: 66.36 சதவீதம்
27. ராமநாதபுரம்: 67.78 சதவீதம்
28. தூத்துக்குடி: 71.17 சதவீதம்
29. திருநெல்வேலி: 71.94 சதவீதம்
30. கன்னியாகுமரி: 66.32 சதவீதம்
31. அரியலூர்: 83.77 சதவீதம்
32. திருப்பூர்: 72.68 சதவீதம்

சென்னையில் படித்தவர்கள் அதிகம். அனால் அங்குதான் ஓட்டுப் போட்டவர்கள் சதவிகிதம் குறைவு. பொதுவாகவே நகரங்களில் வாக்குப்பதிவு சதவிகிதங்கள் குறைவாகவே இருக்கின்றன. இதன் காரணம் என்ன? படித்தவர்களின் அக்கறையின்மையா?

 http://tamil.thehindu.com/       Dated 17th May 2016 செய்தியைப் பாருங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பூங்காநகரிலுள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 133 நரிக்குறவர்கள் நேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர். இவர்களில் 65 பேர் முதன்முறையாக நேற்று வாக்களித் தனர்……… இங்குள்ள 133 நரிக்குறவர்களிடம் வாக்குக்கு பணம் கொடுக்க கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் முயன்றுள்ளன. ஆனால் பணம் வாங்க இங்குள்ள பெரியவர்கள் மறுத்துவிட்டதாக வாக்களித்துவிட்டு திரும்பிய மோகன் (67) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் எங்களது பெயரை சேர்த்தபின்னர்தான் அரசியல்வாதிகள் எங்கள் பகுதிக்கு வந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் இடத்துக்கு அவர்கள் வந்ததே இல்லை. எனவே, ஓட்டுக்கு உள்ள மரியாதையை தெரிந்துகொண்டதால் யாரிடமும் காசு வாங்கவில்லைஎன்று தெரிவித்தார். இது குறித்து பிரமிளா என்பவர் கூறும்போது, “நாங்கள் பாசி, ஊசி, மாலை விற்று பிழைப்பு நடத்துபவர்கள்தான். சில நேரங்களில் பிச்சை எடுத்தும் பிழைக்கிறோம். ஆனால் நாங்கள் ஓட்டுக்கு காசு வாங்கவில்லை. இது சத்தியம். காசு வாங்கினால் எங்களுக்கு அரசியல்வாதிகள் எதையும் செய்து தரமாட்டார்கள். எங்களுக்கு எல்லாவற்றையும் அரசு அதிகாரிகள்தான் இதுவரை செய்து கொடுத்திருக்கிறார்கள்என்றார்.
படிக்காத பாமர மக்களின் விழிப்புணர்வைப்பாருங்கள்!! நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. யார் நமது உண்மையான நம்பிக்கை நட்சத்திரங்கள்??????? உங்கள் சிந்தனைக்கு!!!